★ சாவதற்குள் சரித்திரம் படைக்க துடிப்பவர்களுக்கான ஆயுதம் இது. களமாட அழைக்கிறது... மறத்தமிழர் சேனை. ★ அரசியல் ஒருநாள் தடம் மாறும். அன்று, எம் இனம் அரியணை ஏறும். - மறத்தமிழர் சேனை ★ மானம் மறவர்களுக்கு உயிர். மயிர்நீப்பின் உயிர் வாழாக் கவரிமான் பரம்பரை எமது இனம். - மறத்தமிழர் சேனை ★ அடக்கி ஆண்ட பரம்பரை அடங்கி போகமாட்டோம். அடக்க நினைத்தால் அறுத்தெறிவோம். - மறத்தமிழர் சேனை ★ குழந்தை இறந்தே பிறந்தாலும், பிறந்து இறந்தாலும் வாள் கொண்டு கீறிப்புதைக்கும் வழக்கம் கொண்டவர்கள் மறவர்கள். மறவனைக் கண்டால் மரணம்கூட அஞ்சும். -மறத்தமிழர் சேனை ★ மறத்தி முலைப்பால் குடித்த மாவீரனே , மரணம் உன்னை என்ன செய்துவிட முடியும். களம்கான அழைக்கிறோம் . எமது கரம்பற்றி போராட வா ! போர்க்களம் உனக்கு புதிதல்ல . -மறத்தமிழர் சேனை . ★ போர்க்களத்தில் மறவர்கள் பின்வாங்குவதும் இல்லை, சரணடைவதும் இல்லை, வெற்றி இல்லையேல் வீரமரணம். - மறத்தமிழர் சேனை.★

Thursday, July 14, 2011

சிவகங்கை சீமை -எஸ்.ராமகிருஷ்ணன்

தமிழில் வெளிவந்த சரித்திரபடங்களில் எனக்கு மிகவும் பிடித்தது சிவகங்கை சீமை. கண்ணதாசன் திரைக்கதை வசனம் எழுதி தயாரித்த இந்த படம் 1959ல் வெளியானது. கே. சங்கர் இயக்கியுள்ளார். படத்தில் பதினாறு பாடல்கள். வெற்றிப்படமில்லை என்றபோதும் தமிழ் சினிமாவில் இன்றும் அது ஒரு முன்மாதிரி படம். 


சரித்திரபடம் என்றவுடனே பளபளக்கும் ஜிகினா ஆடைகள், பிரம்மாண்டமான அரண்மனை, நீதி கேட்கும் தர்பார், அலங்காரமான தங்க வைர நகைகள், அந்தபுரம், ஆடல் பெண்கள், விஷம் கொடுத்து கொலை செய்யும் சதிகாரர்கள் , பக்கம் பக்கமாக வசனம் பேசும் நடிகர்கள், தரையில் இழுபடும் உத்தரீயம் என்ற பிம்பமே எப்போதுமிருக்கிறது. 



பாக்யராஜ் ஒரு படத்தின் கனவுகாட்சியில் மன்னர் வேடம் அணிந்து  கண்ணாடி போட்டு கொண்டுவருவார்.  அதை பார்க்க கேலியாக தெரிந்தாலும் குறுநில மன்னர்களாக இருந்தவர்கள் சுதந்திர இந்தியாவின் முன்புவரை இருந்தார்கள். அவர்களில் ஒருவர் கூடவா கண்ணாடி அணிந்திருக்கவில்லை என்று தோன்றியது. 

பாடப்புத்தகம் உருவாக்கியுள்ள சரித்திரம், மன்னர்கள் என்றலே புஜங்கள் துடிக்க ஆவேசமாக பேசக்கூடியவர்கள். வேளைக்கு ஒரு பெண்ணோடு சல்லாபம் செய்கிறவர்கள். வாள்வித்தையில் விற்பன்னர்கள் என்ற பொதுபிம்பத்தை உருவாக்கியிருக்கிறது. உண்மையான சரித்திரம் காட்டும் அகச்சித்திரங்கள் முற்றிலும் வேறுபட்டது.

இந்திய சமஸ்தானங்களும் அதன் அரசர்களும் என்ற புகைப்பட தொகுப்பின் கண்காட்சியை ஒரு முறை டெல்லியில் பார்த்தேன். அந்த புகைப்படங்களை எடுத்தவர் லால தீன் தயால். இந்திய புகைப்படக்கலையின் முன்னோடி கலைஞர் அவர். 1865 ல்களில் அவர் புகைப்பட நிறுவனம் ஒன்றினை உருவாக்கி இந்தியாவின் முக்கிய நிகழ்வுகளை, மன்னர்களை புகைப்படம் எடுத்திருக்கிறார்.

இந்த கண்காட்சியில் நாற்பதுக்கும் அதிகமான இந்திய மன்னர்களின் புகைப்படங்களை பார்வையிட்டேன். அதில் பெரும்பான்மையினரின் உடல் அமைப்பு பருத்தும் குள்ளமாகவும் முகம் இறுக்கமடைந்துமேயிருந்தது. அத்துடன் அவர்கள் நிற்கும் தோரணை சர்க்கஸ் கோமாளிகளை நினைவூட்டியது. அதுபோலவே ராணிகளும் முக்காடு  போட்டபடியே கால் நகம் தெரியாத அளவு பட்டாடை அணிந்து நின்றிருந்தார்கள்.


 மன்னர்களின் வேட்டைக்காட்சிகளை தீன் தயால் கூடவே படமாக்கியிருக்கிறார். ஒரு மன்னர் யானையை கொன்று அதன் மீது சாய்ந்து நின்றிருக்கிறார். இதில் எது யானை என்று வேறுபாடு கண்டுபிடிக்க முடியவில்லை. 

நாயக்க மன்னர்களை பற்றிய சிற்பங்களை தவிர வேறு தமிழகத்தை ஆண்ட மன்னர்களுக்கான நேரடி சான்றுகளாக எதையும் காண முடியவில்லை. ஒன்றிரண்டு ஒவியங்களில் சோழ மன்னர்களின் உருவம் காணப்படுகிறது. சேரன் பாண்டியன் போன்றவர்களின் தோற்றமும் செயல்களும் கவிதைகளில் தான் அதிகம் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. 

அந்த வகையில் சிவகங்கை சீமை முன்னோடியான தமிழ்படம். இதில் தான் முதன்முறையாக மன்னர்கள் வேஷ்டி அணிந்து மேல்துண்டுடன் வந்தனர்.  பகட்டான ஜிகினா அலங்காரங்கள் கிடையாது.  சின்னமருது, பெரியமருது இருவரையும் பற்றிய படம். பெரிய மருதுவாக நடித்துள்ள பகவதி எந்த நேரமும் வீரவசனம் பேசமாட்டார். மிக இயல்பாக, எளிமையான, நிஜமான மனிதராக தோற்றம் தருகிறார். அது போலவே படத்தில் வரும் பெண்களும் கண்டாங்கி சேலைகள் கட்டி, கனகாம்பரம் முல்லை மல்லிகை சூடி யதார்த்தமாக இருக்கிறார்கள்.

சிவகங்கை சீமையின் வரலாறு சரித்திர புத்தங்களில் கூட சிறிதளவே கவனப்படுத்தபட்டிருக்கிறது. மதுரைசீமையை பற்றிய எண்ணிக்கையற்ற சரித்திர குறிப்புகளையும் அதன் முக்கியத்துவத்தையும் காணும் போது சிவகங்கையின் வரலாறு அதிகம் எழுதப்படவேயில்லை என்றே தோன்றுகிறது.

அன்றைய சிவகங்கை சீமை என்பது தெக்கூர்,ஒக்கூர், சிறாவயல், பூங்குடி, திருப்பத்தூர், நரிக்குடி திருமயம், முக்குளம், நாலுகோட்டை, நாட்டரசன் கோட்டை உள்ளடக்கியது. இதற்குள் தான் செட்டிநாடும் அடங்குகிறது. கண்ணதாசன் செட்டிநாட்டில் பிறந்தவர். அதனால் அவர் சிவகங்கை சீமையின் வரலாற்றினை ஆழ்ந்து அறிந்திருக்கிறார்.  

மருது சகோதர்களை பற்றிய நாட்டார்கதைகளையும் பாடல்களையும் கூட கண்ணதாசன் சிறப்பாக தனது படத்தில் பயன்படுத்தியிருப்பார். நாட்டரசன்கோட்டை, காளையார்கோவில் பகுதிகளில் பெரிதும் படமாக்கியிருக்கிறார். படத்தில் வரும் வெல்ஷ் துரை ஆங்கிலத்தில் தான் பேசுகிறார். துபாஷி தான் அதை மொழிபெயர்த்து சொல்கிறார். கோட்டைகள், வீடு யாவும் அந்த நிலப்பகுதியின் யதார்த்தமான கட்டிடங்களாக உள்ளது. 

படத்தின் மிகப்பெரிய குறை எஸ்எஸ்.ராஜேந்திரன். மிகையான மேடைநாடக நடிப்பு. ஒரே விதமான முகபாவம். தேவையற்ற ஆவேசமான உடல்மொழி. கதைக்கு தொடர்பில்லாமல் அவர் திராவிடநாடு பற்றி பாடும் பாடல். இவை தவிர்ககபட்டிருந்தால் படம் இன்னும் சிறப்பாக வந்திருக்ககூடும்.


கட்டபொம்மனை பிடித்து வெள்யையர்கள் தூக்கலிட்டதால் அவரது தம்பியான ஊமைத்துரை சிவகங்கை சீமையில் அடைக்கலமாகிறார். பெரிய மருதுவிற்கு தெரியாமல் சின்னமருது ஊமைத்துரைக்கு அடைக்கலம் தருகிறார். அது வெள்ளையர்களுக்கு கோபத்தை உருவாக்குகிறது. மருது சகோதர்கள் ஊமைதுரையை ஒப்படைக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். அனுமதியில்லாமல் அரண்மனைக்குள் தேட முயற்சிக்கிறார்கள். ஊமை துரையை கைது செய்து தூக்கிலடுவோம் என்று ஆவேசப்படுகிறார்கள். நம்பிவந்தவரை காட்டி கொடுப்பது நட்பல்ல என்று வெள்ளையர்களை மருதிருவர் எதிர்க்கிறார்கள். 

வெல்ஷ் துரை அவர்களை எதிர்த்து சண்டையிட்டு மருது குடும்பத்தினரை சிறை பிடிக்கிறான். பெரிய மருதுவின் தலையை துண்டித்து காளையார் கோவில் முன்பாக போடுகிறான். உடலை தனியே திருப்பத்தூரில் யாரும் அறியாமல் புதைத்தான். மருது குடும்பத்தில் எவரையும் விட்டுவைக்காமல் பழிதீர்த்தது வெள்ளை அரசு.

சிவகங்கை சீமையை படமாக்க வேண்டும் என்ற யோசனைக்கு காரணமாக இருந்தது வீரபாண்டிய கட்டபொம்மன் படம் என்கிறார்கள். நானே ஒரு முறை ம.பொ.சி. அய்யா அவர்களை நேரில் சந்தித்து பேசிக் கொண்டிருந்த போது அவர் வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தின் கதை ஆய்வில் துணை இருந்ததாகவும் சினிமாவிற்காக நிறைய சேர்ந்தார்கள் என்று சொல்லியபடியே சில விஷயங்களை நினைவுகூர்ந்தார்

தமிழ்நாட்டில் கோட்டைகளே கிடையாது.ஆகவே கட்டபொம்மன் படத்தின் பிரதான பகுதிகள் ராஜஸ்தானில் படமாக்கபட்டது.  காளையை அடக்கும் காட்சியில் ஜெமினி மிகவும் பயந்து போய் நடித்தார். இவ்வளவிற்கும் காளையின் காலை கட்டியிருந்தார்கள். துணைக்கு ரெண்டு பேர் பிடித்து கொண்டார்கள். அப்படி தான் காளையை அவர் அடக்கினார்.  அவரால் படத்தில் ஊமை துரை கதாபாத்திரம் பின்தள்ளபட்டுவிட்டது என்று தெரிவித்தார்

வீரபாண்டிய கட்டபொம்மனும் சிவகங்கை சீமையும் ஒரே நேரத்தில் தயாரிக்கபட்டிருக்கின்றன. கண்ணதாசன் மலையிட்டமங்கை படத்தை தயாரித்து பெரிய வெற்றிருந்தால் இந்த படம் நிச்சயம்  வெற்றிபெறும் என்று அதிக நம்பிக்கை கொண்டிருந்தார். அரசியல் காரணங்களுக்காக வீரபாண்டிய கட்டபொம்மன் படத்திற்கும் சிவகங்கை சீமை படத்திற்கும் இடையே தேவையற்ற மோதல்கள், சர்ச்சைகள் உருவாகின. அதை பலர் தூண்டி விட்டனர்.

கண்ணதாசனே இதை பற்றி தனது வனவாசம் நூலில் எழுதும் போது தான் செய்த ஒரே தவறு இந்த படத்தை வீரபாண்டிய கட்டபொம்மன் படத்திற்கு முன்பாக வெளியிட்டது. வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு பிறகு இது வெளியாகி இருந்தால் ஊமை துரையின்  காரணமாக மருது சகோதரர்கள் உயிர்விடும் போது பார்வையாளர்கள் மிகவும் வருந்தியிருப்பார்கள். முன்னதாக வந்த காரணத்தாலும் படம் எந்த ஆடம்பரமான பகட்டும் இல்லாமல் வந்ததுமே அதன் தோல்விக்கு காரணம் என்று குறிப்பிடுகிறார்


வெற்றி தோல்வியை தாண்டி சிவகங்கை சீமை படம் தமிழ்வாழ்க்கையின் பல்வேறு கூறுகளை பதிவு செய்திருக்கிறது. குறிப்பாக வெள்ளையர்களை எதிர்க்க வேண்டும் என்ற சூழல் மருதுவிற்கு எப்படி உருவாகிறது என்பதை படம் அழகாக சித்தரிக்கிறது.  

பெரிய மருது பலமுறை யோசிக்கிறார். கலக்கம் கொள்கிறார். இது தான் ஒருவன் முடிவு எடுக்க வேண்டியது மட்டுமில்லை. தன்னை நம்பிய மக்களின் எதிர்காலம் தொடர்பானது என்று சிந்திக்கிறார். ஆனால் முடிவெடுத்தபிறகு வருவதை தீரத்துடன் எதிர் கொள்கிறார். அதற்காகவே மடிந்து போகிறார். இந்த மனக்கலக்கத்தை பதிவு செய்வதே கலையின் நோக்கங்களில் ஒன்று.


எம்.எஸ்.விஸ்வநாதன் ராமமூர்த்தியின் சிறப்பான இசை, குமாரி கமலாவின் வியப்பான நடனம். தம்புவின் நுட்பமான ஒளிப்பதிவு, கண்ணதாசனின் அற்புதமான பாடல்கள். குறிப்பாக தென்றல் வந்து வீசாதோ என்ற எஸ்.வரலட்சுமியின் பாடலில் உள்ள துயரமும ஆதங்கமும் வலியுடையது. 

பனை நிரம்பிய நிலவெளி. கற்கோட்டைகள். நாட்டார்மரபிலிருந்து உருவான தாள வாத்தியகருவிகளுடன் கூடிய பாடல் மெட்டுகள். காலம் புரண்டு படுத்தது போல இயல்பாக படமாக்கபட்டுள்ள லாவகம். 
சிவகங்கை சீமை வெளியாகி இந்த ஆண்டோடு ஐம்பதாண்டு ஆகிறது. இப்போதாவது அதை கொண்டாடி மறுபார்வைக்கு உள்ளாக்கலாமே ?