★ சாவதற்குள் சரித்திரம் படைக்க துடிப்பவர்களுக்கான ஆயுதம் இது. களமாட அழைக்கிறது... மறத்தமிழர் சேனை. ★ அரசியல் ஒருநாள் தடம் மாறும். அன்று, எம் இனம் அரியணை ஏறும். - மறத்தமிழர் சேனை ★ மானம் மறவர்களுக்கு உயிர். மயிர்நீப்பின் உயிர் வாழாக் கவரிமான் பரம்பரை எமது இனம். - மறத்தமிழர் சேனை ★ அடக்கி ஆண்ட பரம்பரை அடங்கி போகமாட்டோம். அடக்க நினைத்தால் அறுத்தெறிவோம். - மறத்தமிழர் சேனை ★ குழந்தை இறந்தே பிறந்தாலும், பிறந்து இறந்தாலும் வாள் கொண்டு கீறிப்புதைக்கும் வழக்கம் கொண்டவர்கள் மறவர்கள். மறவனைக் கண்டால் மரணம்கூட அஞ்சும். -மறத்தமிழர் சேனை ★ மறத்தி முலைப்பால் குடித்த மாவீரனே , மரணம் உன்னை என்ன செய்துவிட முடியும். களம்கான அழைக்கிறோம் . எமது கரம்பற்றி போராட வா ! போர்க்களம் உனக்கு புதிதல்ல . -மறத்தமிழர் சேனை . ★ போர்க்களத்தில் மறவர்கள் பின்வாங்குவதும் இல்லை, சரணடைவதும் இல்லை, வெற்றி இல்லையேல் வீரமரணம். - மறத்தமிழர் சேனை.★

Friday, April 27, 2012

இந்தியக் குழுவின் சுற்றுலாப் பயணம் வெறும் கண்துடைப்பு நாடகம்

அனலை நிதிஸ் ச. குமாரன்

சிறிலங்காவிற்கு பயணத்தை மேற்கொண்ட இந்திய நாடாளுமன்ற குழுவினர் மகிந்தாவின் அமைச்சர்களையும் சிறிலங்காவின் பாதுகாப்பு அதிகாரிகளையும் கேட்டுத்தான் மூச்சுக்கூட விடுகிறார்கள். ஏப்ரல் 16-ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி வரை இந்திய நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பல்வேறு இடங்களுக்கு சென்று பார்வையிட்டார்கள்.
இந்தியக் குழுவினர் அழைத்துச் செல்லப்பட்ட அனைத்து இடங்களும் இதற்காகவே முன்னரே தயார் செய்யப்பட்டவை. என்ன பேச வேண்டும் என்கிற பாடம் எடுத்த பின்னரே தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் மட்டுமே இந்தியக் குழுவினருடன் சந்திக்க அனுமதிக்கப்பட்டார்கள்.

மனித உரிமை அமைப்புக்களையோ அல்லது சர்வதேச பத்திரிகையாளர்களையோ தமிழர் பகுதிகள் சென்று செய்தி திரட்ட அனுமதி மறுக்கப்படுகிறது. நடக்கும் சம்பவங்களை பத்திரிகைகள் வெளிச்சத்திற்கு கொண்டுவந்து விடுவார்கள் என்கிற அச்சத்தில் சிறிலங்கா அரசு தொடர்ந்தும் பத்திரிகையாளர்களுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்கிறது. இவ்வாறான ஒரு நிலையில், இந்தியக் குழுவினர் சிறிலங்கா சென்றனர்.
இந்தியக் குழுவினருக்கு சொகுசு பயணத்தையே சிறிலங்கா அரசு செய்து கொடுத்தது. இராணுவ வானூர்திகள் மற்றும் குளிரூட்டப்பட்ட சிறிலங்கா அரசின் சிறப்பு சொகுசு பேருந்துகளில் பயணங்களை மேற்கொண்ட குறித்த குழுவினர் சிறிலங்கா அரசின் நேரடி கண்காணிப்பிலேயே இருந்தார்கள். தவறிக்கூட பாதிக்கப்பட்டுள்ள மக்களைப் பார்த்துவிடக் கூடாதென்கிற கோட்பாட்டில் சிங்கள அரசு இருந்தது.
மகிந்தாவின் நேரடி கட்டளையின்படி, அவருடைய சகோதரர் பசில் மற்றும் அமைச்சர்கள் டக்ளஸ், கருணா போன்றவர்களின் நேரடிக் காண்காணிப்பில் பயணங்களை மேற்கொண்ட இந்திய நாடாளுமன்றக் குழுவினர் குறித்த நபர்களை புகழ்பாடிக் கொண்டே தமது பயணத்தை தொடர்ந்தனர்.தாம் தமிழர் பகுதிகளில் அமைக்கப்பட்டிருக்கும் இராணுவ முகாம்களை அகற்ற வேண்டுமென்கிற கோரிக்கையை முன்வைத்ததாக இந்தியா திரும்பியதும் தெரிவித்தார்கள் குறித்த குழுவினர்.இக் குழுவினர் தெரிவித்த கருத்து வெளிவந்த மறுதினமே ஒருபோதும் இராணுவ முகாம்களை அகற்ற முடியாது என்றும் அப்படியானதொரு வாக்குறுதியை இந்தியக் குழுவினருக்கு தாம் வழங்கவில்லையென சிறிலங்கா அரசு திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.
புறக்கணிக்கப்பட வேண்டியவர்கள்
ஈழத் தமிழர்களின் நிலைமைகளை பார்க்கப் போவதாக அறிவித்த குறித்த அனைத்துக் கட்சி குழு என்பது ஈழத் தமிழர்களின் தேசியப் பிரச்சினையை அறியாதவர்களே.இந்தியாவின் இரு பிரதான கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதாக் கட்சிகள் ஒருபோதும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான நிலைப்பாடுகளை 1980-களின் பிற்காலத்திலிருந்து இதுநாள் வரை எடுத்ததில்லை. தி.மு.காவும்,அ.தி.முகாவுமே 1967-ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து மாறிமாறி தமிழகத்தை ஆண்டு வருகிறார்கள்.இரு பிரதான வட இந்தியக் கட்சிகளும் தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதை விட சிறிலங்காவுடன் இராஜதந்திர உறவை பேணுவதே இந்தியாவிற்கு சிறந்தது என்று கருதுகின்றன.
குறித்த குழுவின் உறுப்பினர்கள் இரு பிரதான வட இந்தியக் கட்சிகளின் கோட்பாடுகளுக்கு கட்டுப்பட்டவர்கள். தமது கட்சித் தலைமை என்ன சொல்கிறதோ அதனையே வெளியில் கூற வேண்டும் என்கிற கட்டுப்பாடு இக் குழுவின் உறுப்பினர்களுக்கு இருக்கிறது.நாச்சியப்பன் போன்ற தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு இந்திய நாடாளுமன்றம் சென்றவர்கள் தாம் தமிழர் என்பதனைவிட தாம் சோனியாவின் அடிவருடிகள் என்பதனைக் கூறவே விரும்புகிறவர்கள்.சோனியா கொடுக்கும் பதவிகளுக்காக வால் பிடிக்கும் நாச்சியப்பன் போன்ற தமிழக காங்கிரஸ் உறுப்பினர்கள் தமது தலைமை சொல்வதையே வெளியில் கூற வேண்டும்.
தமிழீழமே தமது இறுதி இலட்சியம் என்று கூறி ஆயுதமேந்திய டக்ளஸ் போன்றவர்கள் தமிழர்களுக்கு பல இன்னல்களை செய்தார்கள். இவர்கள் போன்ற எட்டப்பர்களினால் தான் தமிழீழ தனியரசு மலராது இன்றும் பல இன்னல்களைச் சந்திக்கிறது. பதவி மோகத்தினால் கவரப்பட்ட டக்ளஸ் போன்றவர்கள் தொடர்ந்தும் தாமே தமிழர்களின் பிரதிநிதிகள் என்று கூறுவது வெட்கக்கேடானது.
தமிழகத்தின் சூளைமேட்டைச் சேர்ந்த திருநாவுக்கரசு என்கிற இளைஞர்1986-ஆம் ஆண்டு சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக டக்ளஸ் தேவானாந்தா மீது சூளைமேடு போலீசார் 1987-ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தனர்.அதன் பிறகு டக்ளஸ் இந்தியாவிலிருந்து தப்பி சிறிலங்கா சென்று விட்டார். டக்ளஸை தேடப்படும் குற்றவாளியென1994-ஆம் ஆண்டில் சென்னை கூடுதல் நீதிபதி உத்தரவு பிறப்பித்திருந்தார். அன்றிலிருந்து இன்றுவரை பல தடவைகள் இந்தியா சென்று அரச தலைவர்கள் மற்றும் உயர்மட்ட அதிகாரிகளை சந்தித்தவரே டக்ளஸ்.
இந்தியக் குழுவில் இடம்பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பன் இந்தியாவின் குடிமகனைக் கொன்ற ஒரு குற்றவாளியைப் பார்த்து ஈழத்து எம்.ஜி.ஆர் என அழைத்தார். ஒவ்வொரு வெளிநாட்டு பிரதிநிதிகள் யாழ் வந்தாலும் அவர்களை யாழ் மத்திய கல்லூரிக்கு அழைத்துச் செல்லாமல் வழியனுப்பி வைக்க மாட்டார் டக்ளஸ். தான் இக்கல்லூரியில் படித்த காரணத்தினாலும் மற்றும் தனது விசுவாசிகள் பலர் இக்கல்லூரியில் பணிபுரிவதினாலும் இக்கல்லூரிக்கு அதிக சலுகைகளை வழங்கியே வந்துள்ளார் டக்ளஸ்.
இந்தியக் குழுவினரும் இக் கல்லூரிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.இந்தியக் குழுவினரில் ஒருவரான நாச்சியப்பன் டக்ளஸ் தேவானந்தாவைப் பார்த்து ஈழத்து எம்.ஜி.ஆர் என அழைத்ததும் அவர் தன்னையே மறந்து சிரித்துக் கொண்டார். நாச்சியப்பன் போன்றவர்கள் எப்படியெல்லாம் வால் பிடிக்கிறார்கள் எனபதற்கு இச்சம்பவமே சான்று.
பல கோடித் தமிழ் மக்களின் நாயகன் எம்.ஜி.ஆரை டக்ளசுடன் இணைத்துப் பேசிய நாச்சியப்பனுக்கு தமிழகத்தில் அ.தி.மு.காவினர் என்ன விருதை அளிக்கப் போகிறார்கள் என்பதனை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். நாச்சியப்பன், டக்ளஸ் போன்ற புல்லுருவிகள் சமூகத்திலிருந்து ஒதுக்கப்பட வேண்டியவர்கள். இவர்கள் எங்கேயும் பிழைத்துக் கொள்ளும் வல்லமையுடையவர்கள். எது எப்படியாயினும் தமிழர்களைப் பணயக் கைதிகளாக வைத்து பிழைப்பு நடத்தும் இவர்கள் போன்ற எட்டப்பர்களை புறக்கணிப்பதே ஒரு இனத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்.
இந்தியக் குழுவிற்கு கிடைத்த புகழாரம்
சிறிலங்காவின் அமைச்சர்கள் பலர் இந்தியக் குழுவினரை புகழ்பாடி அறிக்கைகள் விட்டார்கள். சிறிலங்காவிற்கு எதிராக உலக நாடுகளில் வலுத்துவரும் நிலைப்பாடுகளை சரிசெய்ய தேவைப்பட்ட கருவியே குறித்த இந்தியக் குழுவினர். இந்தியருக்கு சிறிலங்காவில் வேலையில்லை என்று கூறி கோஷமிட்ட பல சிங்களக் கட்சிகள் மற்றும் சிறிலங்கா அரசிற்கு ஆதரவான சில கட்சிகள் இந்தியக் குழுவினருக்கு எதிராக எதனையும் பேசாமல் தற்போது இருக்கிறார்கள்.இதன் மூலம் சிறிலங்காவின் கபட நாடகம் என்னவென்பதனை இலகுவாக அறியக் கூடியதாக உள்ளது.
இந்தியக் குழுவினரின் பயணத்தின் மூலமாக தமிழர்களுக்கு எவ்விதத்திலும் பயனில்லை. சிறிலங்காவிற்கு நட்சான்றிதல் கொடுக்கவே இந்த வட இந்தியக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறிலங்கா சென்றார்கள் என்றால் மிகையாகாது. தி.மு.க.மற்றும் அ.தி.மு.க.உறுப்பினர்கள் பங்கேற்காவிட்டாலும் சிறிலங்கா சென்ற இந்திய நாடாளுமன்றக் குழு மிகவும் சிறப்பாகச் செயற்பட்டதாக சிறிலங்காவின் அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன சமீபத்தில் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “இரண்டு வருட காலத்துக்குள் நாங்கள் பல மக்களை மிகவும் வேகமாக மீளக் குடியமர்த்தியுள்ளோம். தமது கிராமங்களில் குடியேற முடியாமல் மிகவும் சொற்பமானவர்களே இருக்கிறார்கள். யாரையும் நாங்கள் கட்டாயமாக முகாம்களில் தங்கவைக்கவில்லை.பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் வழங்கப்பட்ட 4.6 மில்லியன் ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்ட புத்தூர் குட்டிமடம் குளத்தையும் இந்திய குழுவினர் பார்த்திருக்கிறார்கள்.அவை தொடர்பாக அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்திருக்கிறார்கள் என்று அமைச்சர் யாப்பா கூறினார்.
இந்தியக் குழுவினரை சந்தித்த பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூறியதாவது, “அரசியல் தீர்வு உட்பட தமிழ் மக்களின் அனைத்து பிரச்சினைகளின் தற்போதைய நிலை மற்றும் வடக்கின் உண்மை நிலைவரம் போன்ற விடயங்களை மிகவும் ஆழமாக இந்திய பாராளுமன்ற குழுவிற்கு தெளிவுபடுத்தியுள்ளோம். ஒரு மணித்தியாலம் வரை நீடித்த இந்தப் பேச்சுவார்த்தை திருப்திகரமாக அமைந்ததுடன் இருதரப்பும் மனம்விட்டு தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு குறித்து பரந்தளவில் பேசியுள்ளோம். இந்திய அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைக்க ஒத்துழைப்புகளையும் தேவையான உதவிகளையும் செய்யும் என்ற நம்பிக்கை உள்ளது."
சம்பந்தன் அவர்களின் பேச்சிலிருந்து ஒன்றை மட்டும் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும். இந்தியாவை தமிழர் தரப்பினர் புறக்கணிக்கக் கூடாதென்கிற இராஜதந்திர ரீதியிலேயே இவர் பேசியுள்ளார். பாரதிய ஜனதாக் கட்சி தற்போது எதிர்க்கட்சியாக இருக்கிறது.இக் குழுவினால் இந்திய அரசியலில் எவ்வாறான மாறுதல்களை கொண்டு வர முடியும் என்பதே அனைவர் மனங்களிலும் எழும் கேள்வி.
சிறிலங்காவின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் ஒவ்வொரு வினாடியும் என்ன நடக்கிறது என்பதனை இந்திய அரசிற்கு உளவு சொல்ல பல இந்திய உளவுத்துறையினர் ஈழப் பகுதியில் நிற்கிறார்கள். இந்திய நடுவன் அரசினால் வழங்கப்பட்ட பணிகளைச் செய்வதே கொழும்பில் இருக்கும் இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் வேலை. ஆக, இந்தியக் குழுவினால் மட்டும்தான் உண்மை நிலைமைகளை அறிய முடியும் என்பது பொய் வாதம்.
இந்தியக் குழுவினரை சந்தித்த பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் கூறுகையில், “சிறிலங்கா அரசுடனான பேச்சுகள் குறித்து நாம் இந்திய நாடாளுமன்றக் குழுவினருக்கு தெளிவுப்படுத்தினோம்.அத்துடன், இதுவரையில் நடைபெற்று வந்த பேச்சுகள் குறித்தும் விளக்கமளித்தோம். சிறிலங்கா அரசு நேர்மையான நீதியான முறையிலும் பேச்சுக்களில் ஈடுபடவில்லை என்ற விடயத்தையும் இந்தியக் குழுவினரிடம் சுட்டிக்காட்டினோம்.”
அவர் மேலும் தெரிவிக்கையில்இ “சிறிலங்கா அரசு சரியான முறையானதொரு பேச்சுக்கு வரவேண்டும் என்பதே எமது எதிர்ப்பார்ப்பு. அவ்வாறு பேச்சுக்கு வந்து அதில் இணக்கம் ஏற்பட்டால் தெரிவுக்குழு குறித்து பரீசிலிக்கலாம் என்ற கூட்டமைப்பின் நிலைப்பாட்டையும் தெரிவித்தோம். வடக்கு, கிழக்கு பிரச்சினைகளையும் இந்தியக் குழுவின் கவனத்திற்கு கொண்டு வந்தோம். குறிப்பாக, சம்பூர் பிரச்சினை, முல்லைத்தீவில் அரங்கேற்றப்படும் சிங்களக் குடியேற்றம் ஆகியன பற்றி விரிவாக விளக்கப்பட்டது. அதுமாத்திரமின்றி, நீண்டகாலமாகச் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் நிலைமைகள் தொடர்பிலும் இந்தியக் குழுவிற்கு நாம் விளக்கமளித்தோம்."
பிரேமச்சந்திரன் கூறிய அனைத்து விடயங்களும் ஏற்கனவே இந்திய அரசிற்கு நன்கே தெரியும். சிறிலங்கா அரசு தமிழர்களுக்கு எந்தவொரு தீர்வையும் முன்வைக்காது என்பதனை நன்கே அறிந்து வைத்துள்ளது இந்திய நடுவன் அரசு. தமிழர்களின் உணர்வுகளை அறியாத, இது நாள் வரையில் சிறிலங்கா அரசிற்கு ஆதரவான நிலைப்பாடுகளை எடுத்து வந்த வட இந்தியாவின் இரு பிரதான கட்சிகளும் ஈழத் தமிழர்களுக்கு எந்தக் காலத்திலும் உதவப் போவதில்லை.
தமிழகத்தின் அழுத்தத்தின் காரணமாகத்தான் இந்தியா ஈழத் தமிழர் சார்பிலான எந்த முடிவையும் எடுக்க முடியும். நான்காம் கட்ட ஈழப் போர் முடிவுற்று ஒரு வருடத்தில் ஒரு குழுவை இந்திய நடுவன் அரசு சிறிலங்காவிற்கு அனுப்பியது. இக்குழுவில் தி.மு.க. சார்பில் கனிமொழி மற்றும் டி.ஆர்.பாலு ஆகியோரும் இடம்பெற்று இருந்தனர். இக்குழு சென்ற காலத்திலிருந்து இன்று வரை ஏதேனும் மாற்றங்கல் இடம்பெற்றுள்ளதா என்பதனை அறிய,முன்பு சென்ற இருவரில் யாரேனும் ஒருவரை அனுப்பி வைத்து, நிலைமையை ஒப்பிட்டு பார்ப்பதுதான் சரியான வழியாக இருந்திருக்கும்.
ஏப்ரல் 11-ஆம் தேதியன்று அ.தி.மு.க. குறித்த இந்திய நாடாளுமன்றக் குழுவில் இடம்பெறாது என்று அறிவித்தார் ஜெயலலிதா. பயணம் மேற்கொள்வதற்கு முதல் நாளன்று திடீரென்று தி.மு.காவும் சிறிலங்கா செல்லாது என்று அறிவித்தார் கலைஞர் கருணாநிதி. தி.மு.கவும்,அ.தி.முகவும்தான் தமிழகத்தை 1967-ஆம் ஆண்டிலிருந்து மாறிமாறி ஆட்சி செய்துவரும் கட்சிகள்.இந்த இரு கட்சிகள்தான் ஈழத் தமிழர் பிரச்சினையில் முக்கிய முடிவுகளை மேற்கொள்ள வேண்டிய கட்சிகள். இவைகள்தான் உண்மை நிலையை நேரில் பார்த்து ஈழத் தமிழர்களின் சார்பில் மத்திய அரசின் முன் குரல் கொடுக்க வேண்டியவர்கள்.
மத்திய அரசிற்கு உண்மையாகவே அக்கறை இருந்திருக்குமேயானால்,இந்தப் பயணக் குழுவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இரு முக்கிய கட்சிகளான அ.தி.மு.கவும்,தி.மு.கவும் இடம்பெறுவதை உறுதி செய்திருக்க வேண்டும். இந்தியக் குழுவின் பயணத்தினால் ஈழத் தமிழருக்கு எந்த வகையிலும் பயனில்லை என்பதனை நன்கே அறிந்து முடிவு எடுத்தன தி.மு.க.மற்றும் அ.தி.மு.க.
இந்தியாவின் ஆதரவுடன் உலக நாடுகள் பிரயோகிக்கும் அழுத்தங்களிலிருந்து தப்பிக்கவே இப் பயணத்தை சிறிலங்கா பாவிக்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. சோடிக்கப்பட்ட இடங்களைப் பார்த்துவிட்டு சிறிலங்காவின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகள் மிக வளர்ச்சியடைந்து இருக்கிறது என்று கூறுவது மடத்தனம்.